வரகாபொலயிலிருந்து ஐஸ் போதை பொருள் கடத்திய 3 பேர் மட்டக்களப்பில் கைது

 (கனகராசா சரவணன்)

வரக்காபொல பிரதேசத்தில் இருந்து மட்டக்களப்புக்கு கன்ரர் ரக வாகனம் ஒன்றில்  45 கிராம்  ஐஸ் போதைப் பொருளை கடத்தி சென்ற 3 பேரை மட்டக்களப்பு, நாவலடி பிரதேசத்தில்  நேற்று புதன்கிழமை (23) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார இதனை தெரிவித்தார்.இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான நேற்று இரவு 11 மணியளவில் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தலைமையிலான பொலிசார் பொலன்னறுவை மட்டக்களப்பு பிரதான வீதி நாவலடியில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இதன் போது மட்டக்களப்பை நோக்கி இரும்பு அலுமாரிகளை ஏற்றி வந்த கன்ரர் ரக வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது அங்கிருந்து 45 கிராம் ஜஸ் போதை பொருளை மீட்டதுடன் 3 பேரை கைது செய்து வாழைச்சேனை பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.இதில் கைது செய்யப்பட்டவர்கள் வரக்காபொல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் இரும்பு அலுமாரி விற்பனைக்காக மட்டக்களப்புக்கு கன்ரர்ரக வாகனத்தில் எடுத்துவரும் போது அதில் ஐஸ் போதை பொருளையும் வியாபாரத்துக்காக கடத்தி வந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *