வவுனியாவில் இயற்கை நெற்பயிற் செய்கையை ஊக்குவித்த அருந்திக பெர்ணான்டோ எம்பி

வவுனியா, பெரியகட்டில் இயற்கை பசளையில் மேற்கொள்ளப்பட்ட நெற்பயிற் செய்கையை ஊக்குவிக்கும் செயற்பாட்டில் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணாண்டோ ஈடுபட்டார்.

அமைச்சர் விமல் வீரவன்சவின் வடமாகாண ஒருங்கிணைப்பு செயலாளர் மற்றும் வன்னி மாவட்ட ஒருங்கிணைப்பு செயலாளர் ஆகியோருடனான நட்பு ரீதியான தனிப்பட்ட விஜயமாக இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ இன்று (24) வவுனியாவிற்கு விஜயம் செய்தார்.

வவுனியா கோவில் குளம் கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு சென்ற அவர் கிராம அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியதுடன், கோவில்குளம் அகிலாண்டேஸ்வரர் ஆலயத்திற்கும் சென்று வழிபாடுகளை மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, அமைச்சர் விமல் வீரவன்சவின் வடமாகாண அணியினருடன் பம்பைமடு, பெரியகட்டு பகுதிக்கு சென்ற இராஜாங்க அமைச்சர் சேதன பசளையைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட விவசாயிகளை ஊக்குவிக்கும் முகமாக அங்கு இடம்பெற்ற வயல் அறுவடை நிகழ்விலும் கலந்து கொண்டு அறுவடையை ஆரம்பித்து வைத்தார்.

இதன்போது அப் பகுதி விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்.

இதன்போது இராஜாங்க அமைச்சருடன், பனை அபிவிருத்தி அதிகார சபைத் தலைவர் கிறிஸ்சாந்த பத்திராஜா, அமைச்சர் விமல் வீரவன்சவின் வடக்கு அணியினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *