
கீவ், பெப் 25: ஸ்னேக் தீவு அருகே போர்க்கப்பலில் இருந்த ரஷிய வீரர்கள் உக்ரைன் வீரர்களை சரணடையும் படி வற்புறுத்தினர். முடியாது என மறுத்ததால் 13 உக்ரேன் வீரர்கள் கொல்லப்பட்டனர்.
உக்ரைன் கிவ் நகரின் மையப்பகுதியில் இருந்து 10 கி.மீ வரை முழுவதுமாக ரஷிய ராணுவம் சுற்றி வளைத்தது. உக்ரைனில் அதிக மக்கள் தொகை கொண்ட 2வது நகரமான கார்கிவ் மீது பீரங்கிகள் மூலம் ரஷிய ராணுவப்படை தாக்குதல் நடத்தி வருகின்றது.
இந்தநிலையில், உக்ரேனில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஸ்னேக் தீவு அருகே போர்க்கப்பலில் இருந்த ரஷிய வீரர்கள், அத் தீவில் இருந்த உக்ரைன் வீரர்களை சரணடையும் படி வற்புறுத்தினர். முடியாது என மறுத்ததால் 13 பேர் கொல்லப்பட்டனர்.
தாக்குதலை தொடங்கும் முன், அந்த ஆடியோ குரலில் பேசிய ரஷிய ராணுவ அதிகாரி ஒருவர்,
“இது ஒரு ரஷிய இராணுவ போர்க்கப்பல்” என்று ரஷிய தகவல்தொடர்பு பதிவில் கூறியுள்ளனர். “இரத்தம் சிந்துவதையும் தேவையற்ற உயிரிழப்புகளையும் தவிர்க்க உங்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு எங்களிடம் சரணடையுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இல்லையெனில், உங்கள் மீது குண்டு வீசப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது உக்ரைன் ராணுவ வீரர் ஒருவர் பதிலடி கொடுப்பதைக் கேட்க முடிகிறது. அதில் “ரஷிய போர்க்கப்பல், வந்த வழியே நீங்களே திரும்பி சென்று விடுங்கள் என கூறியுள்ளார்.
இதனையடுத்து உக்ரைன் கப்பல் மீது ரஷிய ராணுவ கப்பல் குண்டு வீசி தகர்த்தது.
இந்த ஆடியோ இணையத்தளத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.