
கடந்த அரசாங்கத்தின் தொலைநோக்கு பார்வையற்ற தீர்மானங்களே தற்போது எழுந்துள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தனது தவறு காரணமாகவோ அல்லது தற்போதைய அரசாங்கத்தின் நிதி முகாமைத்துவம் இன்மை காரணமாகவோ பிரச்சினைகள் எழவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போதுள்ள சூழ்நிலையில் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம், எதிர்க்கட்சி மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.
ஆகவே இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் பொறுப்பற்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்றும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.
2015 ஆம் ஆண்டு தவறாக வழிநடத்தப்பட்டதன் விளைவுகளை பொதுமக்கள் மறந்துவிடக் கூடாது என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கேட்டுக்கொண்டார்.
இதேவேளை தமிழ் அல்லது முஸ்லிம் வாக்குகள் இல்லாமல் ஒருவரால் தேர்தலில் வெற்றிபெற முடியாது என்ற கருத்தை 6.9 மில்லியன் மக்கள் நிரூபித்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதித் தேர்தலின் போது பெரும்பான்மையான சிங்களப் பிரஜைகள் தமக்கு வாக்களித்தனர் என்பது அனைவரும் அறிந்ததே என ஜனாதிபதி தெரிவித்தார்.