
கொழும்பு, பெப்.27
கொழும்பு மாவட்ட கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் நோக்கில் கொழும்பு மாவட்ட கிராமிய கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தேசிய கிராமிய கடற்றொழிலாளர் சமேளனத்தின் செயற்பாடுகளை வலுப்படுத்தி நாடளாவிய ரீதியில் உள்ள கடற்றொழிலாளர்களுக்கான சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் எண்ணக்கருவிற்கு அமைய மாவட்ட ரீதியாக கிராமிய கடற்றொழிலாளர் சங்கங்களின் கலந்துரையாடலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கடற்றொழில்சார் மக்களின் வாழ்வியலை பாதுகாத்து வலுப்படுத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாக இருக்கின்ற நிலையில், கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் முன்னுரிமை அடிப்படையில் அந்தந்தப் பிரதேசங்களுக்கு வருகைதந்து தீர்த்து வைக்கப்படும் – கொழும்பு மாவட்ட கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகளிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.