எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 08 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல்!

கிளிநொச்சி இரணைதீவு கடல் பகுதியில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 08 இந்திய கடற்தொழிலாளர்களை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இரணைதீவு கடல் பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற ஒரு விசைப்படகையும் அதிலிருந்து 08 கடற்தொழிலாளர்களையும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி – கிராஞ்சி கடற்படை முகாமில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் கிளிநொச்சி மாவட்ட நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நீதிமன்ற பதில் நீதவான் எஸ். சிவசுப்பிரமணியம் முன்னிலையில் இன்று பிற்பகல் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, குறித்த 08 பேரையும் எதிர்வரும் 11 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் நீரிழிவு நோய்க்கு உட்பட்டு இருப்பதனால் அதற்கான உரிய உணவு மருந்துகளை வழங்குமாறும் மன்று கட்டளையிட்டுள்ளது.

மேலும், இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 16 மற்றும் 18 வயதுடைய சிறுவர்களும் அடங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *