
சென்னை, பெப்.28
உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களுடன் நேரடியாக காணொளி மூலம் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது என்றும், இருக்கும் இடத்தில் பாதுகாப்பாகவும், தைரியமாகவும் மாணவர்கள் இருக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
உக்ரைன் நாட்டில் உயர்கல்வி பயில்வதற்காகச் சென்று தங்கியுள்ள தமிழக மாணவர்களை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் ஏற்கெனவே கடிதம் வாயிலாக வேண்டுகோள் விடுத்திருந்தார்.
மாணவர்களை உடனடியாக தாயகம் அழைத்து வருவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், அவ்வாறு உடனடியாக அழைத்து வருவதற்கான பயணச் செலவையும் தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உக்ரைன் நாட்டில் தற்பொழுது தங்கியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின், தொடர்பு கொண்டு அங்குள்ள நிலவரம் குறித்து கேட்டறிந்தார். மேலும், அவர்களை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது என்றும், மாணவர்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் பாதுகாப்பாகவும், தைரியமாகவும் இருக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தினார்.