
பெருநாட்கள் அல்லது பண்டிகைகள் அரபு மொழியில் “ஈத்” என அழைக்கப்படுகின்றன. ஈத் என்றால் மீண்டும் மீண்டும் வருதல் என்ற கருத்தை கொடுக்கின்றது. ஆண்டு தோறும் வருவதால் பெருநாட்களுக்கு இவ்வாறு பெயர் வந்தது. இஸ்லாத்தில் வருடத்துக்கு ஈதுல் பித்ர், ஈதுல் அழ்ஹா எனும் இரண்டு பெருநாட்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன. நோன்பு, ஹஜ் எனும் இரு இபாதத்களுக்குப் பின்னர் அல்லாஹ் இப்பெருநாட்களை ஆக்கியிருப்பது பெருநாட்களின் நோக்கத்தை தெளிவுபடுத்துகின்றன. அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதும் மக்கள் சந்தோசமாக பொழுதைக் கழிப்பதும் சமூக உறவுகளை வலுப்படுத்துவதும் பெருநாட்களின் நோக்கங்களாகும். இஸ்லாத்தில் பெருநாள் கொண்டாடுவதும் இபாதத்தே ஆகும். மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட வழிமுறைகளுக்கூடாக பெருநாட்களை மகிழ்ச்சியாக சிறப்பாகக் கொண்டாட முடியும்.