
ஒரு விடுமுறை தினத்தில், மேன் முறையீட்டு நீதிமன்ற கதவுகள் திறக்கப்பட்டு அவசரமாக ஒரு வழக்கு தொடர்பில் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட மிக அரிதான சம்பவம் கடந்த நோன்புப் பெருநாள் தினத்தன்று நடந்தது. புத்தளம் மேல் நீதிமன்றால் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சட்டத்தரணி பிரியங்கா உதயங்கனி சமரதுங்கவை சிறை அறைகளுக்குள் இருந்து மீட்க நடந்த போராட்டமே அது. இந்த போராட்டத்தின் ஆரம்ப புள்ளி அல்லது அச்சாணி ஒரு துணிச்சல் மிக்க சட்டத்தரணியின் நீதிக்கான போராட்டமாகும். புத்தளம் நீதிமன்றில் அத்தனை சட்டத்தரணிகளும் கை விரிக்க துணிச்சலாக தனது சக தோழிக்காக நீதி கோரி போராடிய சட்டத்தரணி நதிஹா அப்பாஸ் தொடர்பில் இன்று நாடே பேசுகிறது. அவரது அந்த போராட்டமே இறுதியில் விடுமுறை தினத்திலும் மேன் முறையீட்டு நீதிமன்ற கதவுகளை திறக்கச் செய்தது.