சர்வக்கட்சி மாநாட்டில் ஜீவன் பங்கேற்பு!

ஜனாதிபதி செயலகத்தில் நாளை நடைபெறவுள்ள சர்வக்கட்சி மாநாட்டில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஐ.தே.க நாடாளுமன்றக்குழு தலைவரும், இ.தொ.கா பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான் பங்கேற்கவுள்ளார்.

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிவிதிப்பு தொடர்பில்  ஆராய்வதற்காக சர்வக்கட்சி கூட்டத்தை கூட்டுமாறு எதிரணிகள் சார்பில் ஜனாதிபதிக்கு அனுப்பட்ட கடிதத்தில் ஜீவன் தொண்டமானும் கையொப்பமிட்டிருந்தார்.

இக்கோரிக்கையின் பிரகாரமே சர்வக்கட்சி கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வரிவிதிப்பால் தேயிலை, இறப்பர், இளவங்கப்பட்டை, ஆடை உற்பத்தி போன்ற துறைகளில் தாக்கம் ஏற்படக்கூடும் எனவும், இதனால் பெருந்தோட்ட பகுதி மக்களுக்கும் நேரடி மற்றும் மறைமுக தாக்கங்கள் ஏற்படக்கூடும் எனவும் ஜீவன் தொண்டமான் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, குறித்த வரி விதிப்பில் இருந்து மீள்வதற்குரிய வழிமுறைகள் என்ன, அத்துடன், மாற்றுவழிகள் எவை, அமெரிக்காவுடன் இராஜதந்திர ரீதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் எவை என்பன உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் நாளை ஆராயப்படும்போது, பெருந்தோட்டத்துறை சார் விடயங்கள் சம்பந்தமாகவும் கவனம் செலுத்தப்படும் எனவும் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *