பாதுகாப்புக் கோரும் எம்.பிக்களின் கோரிக்கைகளை தேசிய பாதுகாப்பு சபையின் பரிசீலனைக்கு அனுப்ப நடவடிக்கை

 

தமக்குப் பாதுகாப்புத் தேவை எனக் கோரும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை தேசிய பாதுகாப்பு சபையின் பரிசீலனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்பதாக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.

பாதுகாப்பு தொடர்பான இறுதி மதிப்பீடு அறிக்கை தற்பொழுது கிடைத்துள்ள உறுப்பினர்களுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பதில் பொலிஸமா அதிபர் மேலும் தெரிவித்தார்.

சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் பதில் பொலிஸ்மா அதிபர் மற்றும் அமைச்சர்கள் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளின் பங்குபற்றலில் 2025.05.23 ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே பதில் பொலிஸ்மா அதிபர் இதனைத் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் எதிர்த்தரப்பு கட்சித் தலைவர்கள் சிலர் 2025.05.20 ஆம் திகதி சபாநாயகரைச் சந்தித்து தமது பாதுகாப்புத் தொடர்பான சிக்கலைகளை முன்வைப்பதற்கு கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்து தருமாறு விடுத்த கோரிக்கைக்கு அமைய, அன்றைய தினமே கௌரவ பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபாலவுடன் சபாநாயகர் மேற்கொண்ட கலந்துரையாடலை அடுத்து இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

அதற்கமைய, இங்கு கருத்துத் தெரிவித்த சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பான மதிப்பீட்டு அறிக்கைகளின் முன்னேற்றத்தை தனக்கு அறிவிக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தினார்.

நாட்டில் காணப்படும் பாதுகாப்பு நிலைமை தொடர்பில் அறிவுறுத்திய பொலிஸ்மா அதிபர், அண்மைக்காலமாக இடம்பெற்ற பல மனிதப்படுகொலைகள் குற்றக் கும்பல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கிடையில் இடம்பெறும் மோதல்களின் விளைவுகள் எனவும், அந்தக் குற்றச் செயல்களுக்கு பிரதேச அரசியல்வாதிகளின் தொடர்புள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.

இந்தக் கூட்டத்தில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, எதிர்கட்சியின் முதற்கோலாசான் கயந்த கருணாதிலக்க ஆகியோரும் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள், பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய, அமைச்சர்கள் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *