
விடுதலைப் புலிகள் சிறுவர்களை பலவந்தமாக அவர்களது இயக்கத்தில் சேர்த்தார்கள். ஆனால் மரணமான அச்சிறுவர்களின் பெற்றோர் அவர்களை ஏன் நினைவு கூர முடியாது? ஒரு நாடு, ஒரு சட்டம் என்றால், தெற்கில் ஜே.வி.பி காலத்தில் படையினரால் கொல்லப்பட்ட ஜே.வி.பியினரை நினைவு கூர முடியுமென்றால், ஏன் தமிழ் மக்களால் அவ்வாறு முடியாது?
இவ்வாறு மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு நடத்திய மூன்றாவது அமர்வில் சாட்சியமளித்த கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து கேள்வி எழுப்பினார்.
ஜனாதிபதி ஆணைக்குழு நடத்திய மூன்றாவது விசாரணை அமர்வு கடந்த 14 ஆம் திகதி அன்று பி.எம்.ஐ.சி.எச் மண்டபத்தின் துலிப் கூட்ட அறையில் நடைபெற்றது.
மனித உரிமை மீறல் ஆணைக்குழுவின் தலைவரும், உயர்நீதிமன்ற நீதியரசருமான திலீப் நவாஸ் தலைமையில் இந்த அமர்வு நடைபெற்றது.
‘வடக்கு, கிழக்கு யுத்தம் முடிவடைந்த பின்னர் பரணவிதாரண ஆணைக்குழு மற்றும் எல்.எல்ஆர் சி, ஒ. எம். பி உண்மைக் கமிஷன் என பல ஆணைக்குழுக்கள் கடந்த கால அரசாங்கத்திலும், மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்திலும் உருவாக்கப்ட்டன. அந்த ஆணைக்குழுக்களின் அறிக்கைகளுக்கு என்ன நடந்தது என தெரியாது. அதனையே இந்த ஆணைக்குழுவிடமும் வினவுகின்றேன்’ எனவும் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து அங்கு கேள்வி எழுப்பினார்.