யாழ்ப்பாணம் தவிர ஏனைய இடங்களில் ஹர்த்தால் வெற்றியளித்துள்ளது என தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம் . ஏ சுமந்திரன் மற்றும் பதில் தலைவர் சி.வி.கே சிவஞானம் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர்.
குறித்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில்,
வடக்கு கிழக்கில் உள்ள இராணுவத்தினரை அகற்றுமாறு கோரிக்கையை முன் வைத்து ஹர்த்தாலுக்கு தமிழரசு கட்சி அழைப்பு விடுத்தது.
அதனை ஏற்று வடக்கு கிழக்கில் பெரும்பாலான இடங்களில் ஹர்த்தலுக்கு ஆதரவு கிடைத்திருந்தது.
யாழ்ப்பாணத்தில் குறிப்பாக யாழ், நகர் பகுதியில் மாத்திரமே வர்த்தக நிலையங்கள் திறந்திருந்தது. அவர்கள் ஆதரவு வழங்காதது மன வருத்தமே …
எமது ஹர்த்தால் அறிவிப்பு வந்தவுடனையே ஜனாதிபதி , அமைச்சர் பிமல் உள்ளிட்டவர்கள் எம்மை தொடர்பு கொண்டு பேசி இருந்தனர். முத்துஐயன்கட்டு இராணுவ முகாமை அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம் என கூறினார்கள். இதுவே வெற்றி.
இந்த ஹர்த்தால் ஒரு அடையாள போராட்டமே. இனிவரும் காலங்களில் இராணுவ முகாம்களை அகற்ற கோரி போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுப்போம் என தெரிவித்தார்.