
நாட்டு மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள நெருக்கடியான நிலைமை சம்பந்தமாக வருத்தப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த கஷ்டமான நிலைமையில் இருந்து மக்களை மீட்க ஜனாதிபதி, பிரதமர் உட்பட ஆட்சியாளர்கள் எடுக்க முடிந்த அனைத்து முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.
மக்களுக்கு ஏற்பட்டுள்ள நிலைமையில் இருந்து அவர்களை எப்படி மீட்டெப்பது என்பது தெரியவில்லை. அன்றாடம் உழைக்கும் குறைந்த வருமானம் பெறும் மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மின் வெட்டி, எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு இவர்களை பெரிதும் பாதிக்கும். உடனடியாக இதற்கு ஒரு தீர்வை கண்டாக வேண்டும். நாட்டை தற்போதைய நிலைமையில் இருந்து மீட்டு, மக்களுக்கு நிவாரணங்களை வழங்க ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோர் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் முயற்சிகள் எதனையும் மேற்கொள்ளாமல் இல்லை.
கடனுதவிகளை வழங்கும் தரப்புடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மேலும் சில தரப்பினருடன் இணக்கப்பாடுகளை ஏற்படுத்தி வருகின்றோம்.
சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடுகளை ஏற்படுத்த வேண்டாம் என எமது அமைச்சர்களே கூறியதால், நிதியத்துடனான செயற்பாடுகளை மேற்கொள்ள தாமதமானது.
இறுதியில் சர்வதேச நாணய நிதியத்திடமே செல்ல நேரிட்டுள்ளது. கடன்களை மறுசீரமைப்பு செய்து, சுமை குறைத்துக்கொள்ள வேண்டியுள்ளது. மறுபுறம் நிவாரண அடிப்படையில் டொலர்களை பெற்று, டொலர் தட்டுப்பாட்டை நீக்கி மக்களுக்கு நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.