மக்களுக்கு நன்மையானதை செய்வதே எமது நிலைப்பாடு – ரமேஷ்வரன்

இ.தொ.கா எப்போதும் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கி செயற்படுவதாக  நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, கொட்டகலை பிரதேச சபையின் ஏற்பாட்டில் சபை தலைவர் ராஜமணி பிரசாத் தலைமையில் மகளிர் தின விழா  நேற்று (செவ்வாய்க்கிழமை) கொட்டகலை ரிஷிகேஷ் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “இன்று பொருட்களுக்காக வரிசையில் நிற்பது அனைவருக்கும் தெரியும். நாங்களும் டிசலுக்காக வரிசையில் நிற்கின்றோம். நின்றுதான் டிசலை பெற்று கொள்கின்றோம். இதற்கு முன்னரும் இ.தொ.கா அரசாங்கத்துடன் பேசி மக்களுக்கானதை பெற்று கொடுத்துள்ளோம். சிலர் அரசாங்கத்தில் இருக்கையில் வாய் திறக்கவே இல்லை. காரணம் பதவி பறிபோகும் என்பதில் அவர்களக்கே பயம்.

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளுராட்சி சபைகளுக்கும் எப்போதுமே இ.தொ.கா நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனை ஜீவனும் செய்து வருகின்றார். இ.தொ.கவுக்கு நிர்வாகம் தெரியவில்லை என்றால் 11 உள்ளுராட்சி மன்றங்களை எவ்வாறு கைப்பற்றியது என கேட்க விரும்புகின்றேன்.

ஆளும் கட்சிக்கு நிதி கொடுப்பது போலவே எதிர்க் கட்சிக்கும் நிதி ஒதுக்குவதே எமது பிரச்சினை. ஆகவே இங்குள்ள உறுப்பினர்கள் வேலை செய்யாது விட்டால் அதற்கு நாம் பொறுப்பல்ல. காரணம் காங்கிரஸ் அனைத்து மக்களையும் ஒரே வகையில் பார்க்கின்றது.

நிர்வாகம் செய்ய தெரியாது என்பதை நாம் ஏற்றக்கொள்ள மாட்டோம். நிர்வாகம் தெரியவில்லையாயின் பதுளை, கண்டி, மாத்தறை பகுதிகளில் எவ்வாறு இ.தொ.கா உள்ளுராட்சி சபைகளை கைப்பற்றியுள்ளது. எனவே மக்களுக்கு நன்மையானதை செய்வதே எமது நிலைப்பாடு”என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *