
கல்முனை, மார்ச் 16
எரிபொருள் விலையேற்றத்தை அடுத்து மீனவர்களுக்கு மானிய அடிப்படையில் எரிபொருள் வழங்குவதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை எடுத்துள்ளதாக, மட்டுப்படுத்தப்பட்ட கல்முனை கரையோர மாவட்ட மீனவ கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் தலைவர் எம்.ஜீ.எம். பகுர்தீன் இன்று தெரிவித்தார்.
எரிபொருளுக்கு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதை அடுத்து அரசாங்கத்தினால் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தினூடாக மண்ணெண்ணை மற்றும் டீசல் என்பவற்றை கடற்தொழிலில் ஈடுபடுவோருக்கு மானிய அடிப்படையில் வழங்குவதற்கு அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார்.
எரிபொருள் விலையேற்றத்தை அடுத்து ஆழ்கடல் மீன்பிடித் தொழில் பாதிப்படைந்துள்ளதாகவும், மீனவர்களுக்கு மானிய அடிப்படையில் எரிபொருள் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
கடந்த சில மாதங்களாக கிழக்கு பிராந்திய கடற்பரப்பில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை மற்றும் கடற்கொந்தளிப்பு காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த ஆழ் கடல் மீன்பிடித் தொழில் தற்போது மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், திடீரென அதிகரித்த எரிபொருள் விலையேற்றத்தின் காரணமாக பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கரையிலிருந்து அதிக தூரம் ஆழ்கடலுக்குச் சென்றும் போதிய மீன்பிடி இல்லாத நிலையில் படகுகளின் எரிபொருள் பாவனைக்காக மட்டுமே அதிக பணம் செலவாகுவதாக மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்