
வவுனியாவில் குடும்ப வன்முறையினால் கணவன் மனைவியிடையே சண்டை ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த கணவன் தனது கையிலிருந்த தலைக்கவசம் மற்றும் விறகுக்கட்டையால் மனைவியை தாக்கியதில் காயமடைந்த மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர் .
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
வவுனியா ஏ9 வீதியில் தேனீர் கடை நடத்தி வரும் கணவன் வேறு ஒரு பெண்ணுடன் நெருங்கிப்பழகி வருவதாக மனைவிக்கு கிடைத்த தகவலால் கடந்த இரண்டு வருடங்களாக குடும்பத்திற்குள் முரண்பாடுகள் நிலவி வந்துள்ளது.
கணவன் இரகசிய உறவுடன் தொலைபேசியில் உரையாடி கொண்டிருந்தபோது இருவரையும் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் மனைவியினால் மேற்கொள்ளப்பட்டது.
இதனால் கணவன் வீட்டிலிருந்து வெளியேறி தேனீர்க்கடையில் தஞ்சமடைந்துள்ளதுடன், மனைவி மூன்று பிள்ளைகளுடன் வசதியற்ற நிலையில் பொருளாதார ரீதியில் நலிவடைந்து கணவனின் உதவியின்றி வசித்து வந்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை சம்பவ தினத்தன்று கணவன் இரகசிய உறவிலுள்ள குறித்த பெண்ணை இரகசிய இடத்தில் சந்தித்து விட்டு திரும்பிக்கொண்டிருந்தபோது அங்கு திடீரென்று வந்த மனைவி இங்கு எதற்காக சென்றீர்கள் என கேட்டு தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார .
இதை சற்றும் எதிர்பாராத கணவன் வீட்டிற்கு சென்று மனைவியுடன் முரண்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.
கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாத கணவன் கையில் வைத்திருந்த தலைக்கவசத்தினால் மனைவியை தாக்கியதுடன் அங்கிருந்த விறகுக்கட்டை ஒன்றினால் தாக்கி மேலும் காயப்படுத்தியுள்ளார்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த மனைவி அயலவர்களினால் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 12 தையல் தலையில் போடப்பட்டு இரண்டு நாட்கள் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றபோதும் பொலிசார் இத்தாக்குதலை மேற்கொண்ட கணவனை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தவில்லை.
பொலிசார் கணவனுக்கு சார்பாக நடந்துகொள்வதாகவும், தன்னை தாக்கி காயப்படுத்திய கணவனை கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறும் பாதிக்கப்பட்ட மூன்று பிள்ளைகளின் தாயார் தெரிவிக்கின்றார்.