மண்ணெண்ணெய் தட்டுப்பாடு காரணமாக மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக கற்பிட்டி மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதனால் கற்பிட்டி, வன்னிமுந்தல், துறையடி, சின்னக்குடியிருப்பு, ஆனவாசல், தொட்டுப்பொல உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1500 இற்கும் அதிகமானோர் தமது ஜீவனோபாய தொழிலாக மீன்பிடித் தொழிலையே மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நாளாந்தம் கடற்தொழிலுக்கு தேவையான மண்ணெண்ணெய்க்கு பெரும் தட்டுப்பாடு காணப்படுவதாக மீனவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மண்ணெண்ணெய் கொள்வனவு செய்வதற்காக எரிபொருள் நிலையத்திலும், மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்குகின்ற வர்த்தக நிலையங்களிலும் நீண்ட நேரம் வரிசையில் காத்து நிற்கின்ற போதிலும், மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மாத்திரம் மண்ணெண்ணெய் வழங்கப்படுவதாகவும் மீனவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள நாளொன்றுக்கு கரையிலிருந்து 40 கிலோ மீற்றர் தூரம் சென்று வர 100 லீட்டர் வரை மண்ணெண்ணெய் தேவைப்படுவதாகவும் மீனவர்கள் குறிப்பிட்டடர்.
எனினும், மீனவர் ஒருவருக்கு 20 லீட்டர் வரை வழங்கப்படுவதால் ஐந்து நாளைக்கு சேமித்து வைத்த மண்ணெண்ணெய்யை பயன்படுத்தியே ஒரு தடவைக்கு மீன்பிடித் தொழிலுக்காக பயணிக்க வேண்டிய அவல நிலை காணப்படுவதாகவும் கற்பிட்டி மீனவர்கள் கூறுகின்றனர்.
இதனால், கடந்த சில நாட்களாக நூற்றுக்கணக்கான பீன்பிடி இயந்திர படகுகள் கற்பிட்டி கரையோர பகுதிகளில் தரித்து நிற்பதையும் அவதானிக்க முடிகின்றது.
நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இவ்வாறு அன்றாட மீன்பிடித் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளதால், மீனவர்களினதும், மீன்பித் தொழிலாளர்களினதும் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.
எனவே, மீன்பிடி தொழிலை மேற்கொள்ளும் மீனவர்களுக்கு தேவையான மண்ணெண்ணெயை வழங்குவதற்கு அரசாங்கம் விஷேட திட்டங்களை அமுல்படுத்த வேண்டும் எனவும் கற்பிட்டி மீனவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
