மத்திய வங்கி ஆளுநர் அஜித் கப்ரால் நீக்கப்படுகிறார்?

கொழும்பு, மார்ச் 16

இலங்கையின் பொருளாதாரம் கையாளப்படும் விதம் குறித்து நிதியமைச்சருக்கும் மத்திய வங்கி ஆளுநருக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் காணப்படுவதை சுட்டிக்காட்டியுள்ள நிபுணர்கள் மத்திய வங்கி ஆளுநர் பதவியிலிருந்து விரைவில் அஜித் நிவாட் கப்ரால் மாற்றப்படுவார் நாணயசபையும் முற்றாக மாற்றப்டும் என தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் கடந்த சில நாட்களாக தனக்கும் நிதியமைச்சருக்கும் இடையிலான உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்படுவதை தயக்கத்துடன் நிராகரிக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

ஆசிய கிளியரிங் யூனியனின் பணம் செலுத்துபவர்களின் ஒத்திவைப்பின் மூலம் இலங்கை வங்குரோத்து நிலையை அடைவதை தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ள இந்தியா-நடுத்தர கால கடன்உதவிகளை வழங்கிவரும் இந்தியா-நிதி உதவியை அதிகரிப்பதற்கான தெளிவான திட்டத்தை கோரியுள்ளதுடன் – இலங்கை மத்திய வங்கியின் திட்டம் திருப்தியளிக்கவில்லை என தெரிவித்துள்ளது.

மேலும் நிதியமைச்சு இலங்கை மத்திய வங்கியை கலந்தாலோசிக்காமல் சர்வதேச நாணய நிதியம் மற்றும் அமெரிக்காவிற்கான இலங்கை தூதரகம் ஆகியவற்றுடன் தொடர்புகளை ஏற்;படுத்தியுள்ளமையும் மத்திய வங்கியின் ஆளுநரின் எதிர்காலம் குறித்து வெளியாகும் தகவல்களை உறுதிப்படுத்தும் விதத்தில் காணப்படுகின்றது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக்கிற்கான தலைவர் கலாநிதி சி ரீ- இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்- அவர் தனது அமைப்பின் அவதானிப்புகளை இலங்கை அரசாங்கத்திற்கு தெரிவிப்பார்.

இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணயநிதியத்துடன் இணைந்து செயற்பட தீர்மானித்தால்-அதன் பிஓபீ திட்டத்தை முன்னெடுக்க விரும்பினால்,சர்வதேச நாணயநிதியத்தின் தலையீட்டை கடுமையாக எதிர்க்கும் மத்திய வங்கி ஆளுநர் தொடர்ந்தும் பதவியில் நீடிப்பது மிகவும் கடினமான விடயமாக மாறிவிடும் என அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக மத்திய வங்கியின் பல பதவிகளில் மாற்றங்கள் ஏற்படலாம்.உலகின் பல மத்திய வங்கிகள் விடயத்தில் சர்வதேச நாணயநிதியம் தலையிட்டவேளை இவ்வாறான மாற்றங்கள் நிகழ்ந்தன.

இதன் காரணமாக சர்வதேச நாணயநிதியத்திற்கும் நிதியமைச்சருக்கும் ஆதரவான விதத்தில் கொள்கைகளை முன்னெடுக்க கூடிய ஒருவர் புதிய ஆளுநராக நியமிக்கப்படவுள்ளார் என அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அரசாங்கத்தின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இலங்கை சர்வதேச நாணயநிதியத்துடன் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவது என்றால் சுயாதீன மத்திய வங்கியொன்று ஏற்படுத்தப்படுவது அவசியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *