
தமிழர்கள் பலமாக இருந்த சூழ்நிலையில் எதையும் செய்யாத அரசு சர்வதேசத்தை ஏமாற்றி, தமிழர்களையும் பிரித்தாண்டு பலவீனப்படுத்தி உள்ளது. இச்சூழ்நிலையில் ஒன்றுமே இல்லாமல் போவதைவிட உள்ளதைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைத்து தமிழ்த் தலைமைகளுக்கும் உண்டு என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான இரா.துரைரெட்னம் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இதனை கூறியுள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்நாட்டைப் பொறுத்தவரையில் தமிழ்பேசும் மக்களின் உரிமைகள் தொடர்பாக இலங்கையை மாறிமாறி ஆட்சி புரிகின்ற அரசாங்கங்கள் இனவாதம் பூசி ஏமாற்றி வருகின்றதே வரலாறாகும்.
இதனால் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லாது தமிழர்கள் சர்வதேசத்தை நாடி முறையிட்டதும், தேசிய நலன் கருதி நடக்காமல் இருப்பதும், தேசியக் கொடிகளை ஏற்றாமல் இருப்பதும், தமிழீழ கோரிக்கையை முன்வைப்பதும், சுயாட்சி அதிகாரம் கேட்பதும், அரசாங்கத்திற்குச் சார்பாக நடக்காமல் இருப்பதும், தொடர்ச்சியாகத் தமிழர்கள் அரசுக்கு எதிராக வாக்களிப்பதும், மாறிமாறி ஆட்சி புரிகின்ற அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்.
இதிலிருந்து தமிழர்களை அரசாங்கம் மீட்க வேண்டுமாயின் அரசாங்கத்தின் தமிழர்கள் தொடர்பான நல்லெண்ண செயற்பாடு தமிழர்களுக்கு நம்பிக்கையை ஊட்ட வேண்டும். இத் தருணத்தில் தமிழர்களை உரிமைகள் தொடர்பாக ஜனாதிபதி பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளாரா?
அல்லது நடைமுறைப் பிரச்சினைகளைச் சர்வதேசத்திற்கு நல்லெண்ண சமிக்சையாக காட்டுவதற்கு அழைத்துள்ளாரா? தமிழர்கள் பலமாக இருந்த சூழ்நிலையில் எதையும் செய்யாத அரசு சர்வதேசத்தை ஏமாற்றி, தமிழர்களையும் பிரித்தாண்டு பலவீனப்படுத்தி உள்ளது. இச் சூழ்நிலையில் ஒன்றுமே இல்லாமல் போவதைவிட உள்ளதைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைத்து தமிழ்த் தலைமைகளுக்கும் உண்டு.
ஒவ்வொரு தலைமையும் தாங்கள் நினைத்ததை மட்டும் நடைமுறைக்கு வரவேண்டுமெனக் கூறுவது இன்றைய காலச் சூழ்நிலையில் பொருத்தமான விடயங்கள் அல்ல.
கையில் உள்ளவற்றைக் குறிப்பாக 13ஆவது திருத்தச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. நல்லாட்சிக் காலத்தில் புதிய தீர்வுத் திட்டத்தைக் காட்டி காலத்தை வீணடித்து ஏமாற்றியதே இனவாத அரசின் வரலாறு.
இனி புதிய அரசு ஏமாற்ற முயல்வது அவர்களின் முயற்சி ஊடாக தெரிய வருகின்றது. எனவே உள்ளதையும் இல்லாமலாக்குவதற்கு எடுக்கப்படும் முயற்சிகளுக்கு தமிழ் தலைமைகள் துணை போகக் கூடாது.
இச்சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி சந்திப்பதற்கான அழைப்பை உரிமைகள் தொடர்பாக இருந்தால் பாரதப்பிரதமரின் வருகையையும், சர்வதேசத்தின் அழுத்தத்தையும் பரிசீலனைக்குத் தமிழ்த் தலைமைகள் உட்படுத்த வேண்டும்.
ஒருசிலர் இம்மாவட்டத்தில் 13ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாமலாக்குவதற்கு துணை நிற்பது தற்காலிகமாக உள்ள அதிகாரத்தைக் குறிப்பாக, நாடாளுமன்றத்தில் அரசியல் சாசனத்தில் உள்ளடக்கிய சட்டத்தையும், உள்ளூராட்சியிலும், மாகாணசபையிலும் இருக்கின்ற, செய்ய வேண்டிய அதிகாரத்தை இல்லாமலாக்கும் செயலாகவே நான் கருதுகின்றேன். எனவே இத் திட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட மக்கள் துணைபோகக் கூடாது.- எனக் குறிப்பிட்டுள்ளார்.