புலமைச் சொத்து சட்டமூலத்தை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார்

கொழும்பு, மார்ச் 17

பாராளுமன்றத்தில் கடந்த 08ஆம் திகதி விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட புலமைச் சொத்து (திருத்தச்) சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபபேவர்த்தன தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.

இலங்கையின் பொருளாதாரத்திற்கு கணிசமான பங்களிப்பைச் செலுத்தும் புவியியற்சார் சுட்டிக்காட்டுகைகளான சிலோன் சினமன் (Ceylon Cinnamon) போன்ற தயாரிப்புக்களைப் பதிவுசெய்வதற்கு புலமைச் சொத்துச் சட்டத்தில் உரிய நடைமுறைகள் உள்வாங்கப்படாமையால் அவை இதுவரை சான்றிதழ் குறி (Certificate marks) என்ற விடயத்தின் கீழேயே பதிவுசெய்யப்பட்டன. இந்த நிலையில் சிலோன் டீ (Ceylon Tea), சிலோன் சினமன் (Ceylon Cinnamon), சிலோன் பெப்பர் (Ceylon Pepper), சிலோன் கஜூ (Ceylon Cashew) போன்ற உற்பத்திகள் எதிர்காலத்தில் இலங்கையின் புவியியற்சார் சுட்டிக்காட்டிகளாகப் பதிவுசெய்யவதற்கான வாய்ப்பு இதன் ஊடாக ஏற்படுவதுடன், குறித்த பெயர்களில் போலியான தயாரிப்புக்களைத் தடுப்பதற்கான சட்டபூர்வமான கட்டமைப்பொன்று நிறுவப்படும்.

இதற்கமைய இந்தச் சட்டமூலம் 2022 ஆண்டு 8ஆம் இலக்க புலமைச் சொத்து (திருத்தச்) சட்டம் என நேற்று (16) முதல் நடைமுறைக்குவரும். இந்தச் சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர மற்றும் சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும், தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளருமான எச்.ஈ.ஜனகாந்த சில்வா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *