ரஷ்யாவில் இன்ஸ்டாகிராமுக்கு பதிலாக ‘ரோஸ்கிராம்’ செயலி

மாஸ்கோ, மார்ச் 17

உலகம் முழுவதும் பலகோடி மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் பிரபல சமூக வலைத்தளங்களான ‘பேஸ்புக்’ மற்றும் ‘இன்ஸ்டாகிராம்’ தங்கள் தளத்தில் வன்முறை மற்றும் வெறுப்பு பேச்சு தொடர்பான பதிவுகளை சகித்துக்கொள்ள மாட்டோம் எனகூறி அவற்றை நீக்குவதோடு, அந்த பதிவுகளை வெளியிடுவோரின் கணக்குகளையும் முடக்கி வருகின்றன.

இந்த நிலையில் உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்ய அதிபர் புதின், அந்த நாட்டு ராணுவ வீரர்கள் மற்றும் ரஷியாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் பிறநாட்டு தலைவர்களுக்கு எதிராக வெறுப்பு பதிவுகளை வெளியிட அனுமதிப்பதாக ‘பேஸ்புக்’ மற்றும் ‘இன்ஸ்டாகிராம்’ நிறுவனங்கள் அறிவித்தன. இதனால் ஆத்திரமடைந்த ரஷ்யா மார்ச் 14 (திங்கள்கிழமை) தங்கள் நாட்டில் இன்ஸ்டாகிராம் சேவையை முடக்குவதாக அறிவித்தது. இந்நிலையில், இன்ஸ்டாகிராமிற்கு பதிலாக ரஷிய தொழில்நுட்ப தொழில்முனைவோர் உள்நாட்டு சந்தையில் மார்ச் 28 அன்று கூடுதல் செயல்பாடுகளை கொண்ட ‘ரோஸ்கிராம்’ புகைப்பட பகிர்வு செயலியை அறிமுகப்படுத்த உள்ளனர்.

இதுகுறித்து, மக்கள் தொடர்பு இயக்குனர் அலெக்சாண்டர் சோபோவ் கூறுகையில், “எனது நண்பரான கிரில் பிலிமோனோவ் மற்றும் எங்கள் டெவலப்பர்கள் குழு இந்த நிகழ்வுகளுக்கு ஏற்கனவே தயாராக இருந்தனர், மேலும் ரஷிய மக்களால் விரும்பப்படும் ஒரு பிரபலமான சமூக வலைப்பின்னலின் அனலாக்கை உருவாக்கும் வாய்ப்பை இழக்க வேண்டாம் என்று முடிவு செய்தனர்,” எனக் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *