
வாஷிங்டன், மார்ச் 17
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதனால் ரஷியாவின் பொருளாதாரம் அடி வாங்கி உள்ளது. மற்றொரு பக்கம் கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. இதையொட்டி ரஷ்ய துணைப்பிரதமர் அலெக்சாண்டர் நோவக் கடந்த வாரம் கருத்து தெரிவிக்கையில்,
‘‘மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகளை அடுத்து எண்ணெய் மற்றும் எரிவாயுத்துறையில் இந்திய முதலீட்டை ஈர்க்க ரஷியா விரும்புகிறது’’ என குறிப்பிட்டார். இந்த நிலையில், இந்தியாவுக்கு ரஷியா சலுகை விலையில் 30 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் வழங்க முன்வந்துள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. இதுபற்றி பெட்ரோலிய மந்திரி ஹர்தீப் சிங் பூரி கூறும்போது,
“இது தொடர்பாக ரஷிய கூட்டமைப்பின் பொருத்தமான மட்டத்தில் இந்தியா பேசி வருகிறது. தற்போது பேச்சு நடந்து வருகிறது. எவ்வளவு எண்ணெய் கிடைக்கிறது என்பது போன்று பல சிக்கல்கள் உள்ளன” என குறிப்பிட்டார். ரஷ்யாவிடம் சலுகை விலையில் கச்சா எண்ணெய் வாங்க பேச்சு வார்த்தை நடப்பது அமெரிக்காவுக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதையொட்டி நேற்று முன்தினம் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில், அதன் ஊடக செயலாளர் ஜென் சாகி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் தள்ளுபடி விலையில் ரஷியாவின் கச்சா எண்ணெய்யை இந்தியா போன்ற நாடுகள் வாங்குவதன் சாத்தியம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘‘இது ரஷ்யா மீதான அமெரிக்க தடைகளை மீறுவது ஆகாது’’ என்றார். என்றாலும் எல்லா நாட்டுக்கும் எங்கள் நிலை தொடர்கிறது. வெளிப்படையாகவே நாங்கள் விதித்த மற்றும் பரிந்துரைக்கப்பட்ட தடைகளுக்கு கட்டுப்பட வேண்டும். மேலும் ரஷிய தலைமைக்கு ஆதரவு என்பது ஒரு பேரழிவு தாக்கத்தை ஏற்படுத்தும் படையெடுப்புக்கான ஆதரவு ஆகும் என்றும் அவர் தெரிவித்தார். இவ்வாறு அவர் கூறினார்.