
கொழும்பு, மார்ச் 17
எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில், மின் கட்டணங்களை அதிகரிப்பதற்கான தீர்மானத்தை மின்சார சபை மேற்கொண்டுள்ளது. எவ்வாறான விலை அதிகரிப்பை மேற்கொள்வது என்பது தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்வதற்கு மின்சார சபை உயரதிகாரிகள் மத்தியில் விஷேட பேச்சு இன்று நடைபெறவுள்ளது.
நாட்டில் எரிபொருள் விலை பாரியளவில் அதிகரித்துள்ளன. இந்நிலையில் மின் உற்பத்திக்கான செலவு அதிகரிப்பு, மின் அலகொன்றின் மூலம் எதிர்கொள்ள நேர்ந்துள்ள நஷ்டம் அதிகரிப்பு, ஒன்பது வருடங்களாக மின் கட்டணத்தை அதிகரிப்பை ஏற்படுத்தாமை உள்ளிட்ட விடயங்களைக் கவனத்திற்கொண்டே, மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
தற்போது மின்சார சபையானது வருடாந்தம் 25,000 கோடி ரூபா நஷ்டத்தை எதிர்கொண்டு வருகிறது. அந்தவகையில் தற்போதைய நெருக்கடி நிலைமையை எதிர்கொள்வதற்கு மின் கட்டணத்தை அதிகரிப்பதைத் தவிர வேறுமாற்று வழிகள் கிடையாது என்றும் மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதேவேளை, நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையானது மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் கண்டிப்பாக நீர்க் கட்டணத்தையும் அதிகரிக்க நேரும் எனத் தெரிவித்துள்ளது.
நீர் உற்பத்தி மற்றும் விநியோக நடவடிக்கைகளின் போது பெருமளவு மின்சாரம் உபயோகப்படுத்தப்படுவதை கவனத்திற்கொண்டு நீர்க் கட்டணத்தை அதிகரிப்பது அவசியமென அந்த சபை தெரிவித்துள்ளது.