அடம்பனில் யானை தாக்கி குடும்ப பெண் உயிரிழப்பு!

யானை தாக்கி படுகாயமடைந்த 3 பிள்ளைகளின் தாயார் 4 நாட்களின் பின்னர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

மன்னார் – அடம்பன் பகுதியில் கடந்த 13ஆம் திகதி அதிகாலையில் வீட்டு வளாகத்துக்குள் புகுந்த யானை குடும்பப்பெண்ணைத் தாக்கியதில் சதனாந்தன் சுதா (வயது-46) என்ற குடும்பப்பெண்ணே உயிரிழந்தார்.

அதிகாலை ஒரு மணிக்கு வீட்டுக்கு முன் உள்ள வீதியில் சத்தம் கேட்டுள்ளது. அதனால் வெளியே வந்த குடும்பத்தலைவர் ரோச் லைட் அடித்து பார்த்துள்ளார்.

அவரது மனைவியும் வீட்டு முற்றத்துக்கு வந்துள்ளார். அப்போது யானை ஒன்று வீட்டு வளாகத்துக்குள் நுழைந்து இருவரையும் தாக்க வந்துள்ளது. அதனால் கணவர் வீட்டுக்குள் நுழைந்து கதவை பூட்டியுள்ளார்.

வீட்டுக்கு வெளியில் இருந்த மனைவி ஓடி மறைவாக இருந்துள்ளார். வீட்டுக்குள் நுழையாத யானை மறைவில் இருந்த பெண்ணைத் தாக்கிவிட்டு அங்கிருந்த மரங்களையும் அடித்து முறித்துவிட்டுச் சென்றுள்ளது.

யானை தாக்கி படுகாயமடைந்த பெண், மன்னார் மருத்துவனையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

எனினும் நான்கு நாள்களின் பின் நேற்று வியாழக்கிழமை சிகிச்சை பயனின்றி குடும்பப்பெண் உயிரிழந்தார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா மருத்துமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் இறப்பு விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க அறிக்கையிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *