எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள் – அதிசக்தி வாய்ந்த சொகுசு வாகனங்களின் அணிவகுப்பில் அமைச்சர்?

அதிசக்தி வாய்ந்த மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சொகுசு வாகனங்களின் அணிவகுப்பில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவோ அல்லது அவரது சகோதரர்களோ ஈடுபடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இணைப்புச் செயலாளரும், வடக்கு, கிழக்குக்கான விசேட மீள்குடியேற்ற ஒருங்கிணைப்பாளருமான கீதநாத் காசிலிங்கம் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தனியார் வாகன அணிவகுப்பு எனவும், சிலர் போலியான தகவல்களை வெளியிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் எரிபொருளினையும், எரிவாயுவினையும் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

இந்தநிலையில் நேற்றைய தினம்(வியாழக்கிழமை) ஒரு தரப்பினர் பொலிஸ் பாதுகாப்புடன் குளியாப்பிட்டியில் இருந்து கல்பிட்டி வரை மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சொகுசு வாகனங்களின் அணிவகுப்பில் பங்கேற்றிருந்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.

அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுடன் தொடர்புடையவர்களே இவ்வாறு அதிசக்தி வாய்ந்த மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சொகுசு வாகனங்களின் அணிவகுப்பில் பங்கேற்றிருந்ததாகவும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *