யானை தாக்கியதில் சிகிச்சைப் பெற்றுவந்த பெண் உயிரிழப்பு

யானை தாக்கி படுகாயமடைந்த மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் நான்கு நாள்களின் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது மன்னார், முருங்கன் – அடம்பன் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் அந்த பகுதியை சேர்ந்த சதானந்தன் சுதா (வயது-46) என்ற குடும்பப்பெண்ணே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 13ம் திகதி அதிகாலையில் ஒரு மணியளவில் வீட்டிற்கு முன் உள்ள வீதியில் சத்தம் கேட்டுள்ளது. அதனால் வெளியே வந்த குடும்பத்தலைவர் ரோச் லைட் அடித்து பார்த்துள்ளார். அவரது மனைவியும் வீட்டு முற்றத்துக்கு வந்துள்ளார்.

அப்போது யானை ஒன்று வீட்டு வளாகத்துக்குள் நுழைந்து இருவரையும் தாக்க வந்துள்ளது. அதனால் கணவர் வீட்டுக்குள் நுழைந்து கதவைப் பூட்டியுள்ளார். வீட்டுக்கு வெளியில் இருந்த மனைவி ஓடி மறைவாக இருந்துள்ளார்.

வீட்டுக்குள் நுழையாத யானை மறைவில் இருந்த பெண்ணைத் தாக்கிவிட்டு அங்கிருந்த சென்றுள்ளது. யானை தாக்கியதில் படுகாயமடைந்த பெண், மன்னார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்

எனினும் நான்கு நாள்களின் பின் இன்று காலை சிகிச்சை பலனின்றி குடும்பப்பெண் உயிரிழந்தார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் இறப்பு விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *