
டீசல் இல்லாததால் பிரேதப் பெட்டியுடன் வரிசையில் காத்திருந்த சம்பவம் ஒன்று ஹாலி – எல பிரதேசத்தில் நடந்துள்ளது. உயிரிழந்தவரின் உடலை கையளிக்கச் சென்ற மலர்சாலை ஊழியர்களே டீசலுக்காக பலமணிநேரம் வரிசையில் காத்திருக்க நேர்ந்துள்ளது.
“உடலை வைத்துக் கொண்டு பல மணிநேரம் காத்திருக்கின்றோம். டீசல் இல்லை. உடலைக் கொண்டு சென்று கொடுப்பதற்கு வழியில்லை. இந்த அரசாங்கம் என்ன செய்கின்றது?” என்று வாகனத்துடன் பலமணி நேரம் காத்திருந்த மலர்ச்சாலை ஊழியர் கொதிப்புடன் கேள்வி எழுப்பினார்.
“ஒருவர் இறந்தால் இறுதிக் கிரியைக்கூட உரிய நேரத்தில் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. இது நேற்று (நேற்றுமுன்தினம்) மாலை ஏற்பட்ட மரணம். இன்னமும் உடலை ஒப்படைக்க முடியவில்லை.
இந்த நாட்டை வாழ்வதற்கும் வழியில்லாது ஆக்கிவிட்டனர், இறந்தபின்னரும் நிம்மதியில்லாமல் ஆக்கிவிட்டார்கள். இந்த அரசாங்கம் என்ன செய்கின்றது. மலர்சாலை வாகனத்துக்குக் கூட டீசல் இல்லை. நாம் எவ்வளவு நேரம் உடலை வைத்துக் கொண்டு காத்திருப்பது. வாழ்க்கையே வெறுக்கின்றது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
நாடு முழுவதும் தற்போது எரிபொருளுக்குக் கடும் நெருக்கடி நிலவுகின்றது. எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்கள் நீண்ட வரிசைகளில் எரிபொருளுக்காகக் காத்திருக்கின்றன. பொதுமக்கள் மண்ணெண்ணெய் பெற்றுக்கொள்வதற்காக கொளுத்தும் வெயிலில் காத்திருப்பதையும் காண முடிகின்றது.