புத்தளத்தில் இன்று முதல் கோழி இறைச்சிக்கும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
இலங்கையில் கொரோனா பரவல் ஏற்படத் தொடங்கியதற்கு பின்னர் அத்தியாவசிய பொருட்கள் உட்பட பெற்றோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு எனபனவற்றுக்கு பெரும் தட்டுப்பாடு காணப்படுகிறது.
இந்த நிலையில், புத்தளம், முந்தல் மற்றும் கற்பிட்டி ஆகிய பகுதிகளில் பிரய்லர் கோழி இறைச்சிக்கு இன்று வெள்ளிக்கிழமை பெரும் தட்டுப்பாடு நிலவியது.
நாளாந்தம் தமக்குத் தேவையான அளவு கோழிகளை விநியோகம் செய்கின்ற மொத்த விற்பனையாளர்கள் நேற்று வியாழக்கிழமை குறைந்த அளவே தமக்கு உயிருடன் கோழிகளை விநியோகித்ததாக கோழி இறைச்சிக் கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
இதனால் தமக்கு கிடைத்த கோழிகளை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் விற்பனை செய்ய முடியாததாகவும் கோழி இறைச்சி விற்பனையாளர்கள் குறிப்பிட்டனர்.
இதேவேளை, இன்று வெள்ளிக்கிழமை ஒரு கிலோ கோழி இறைச்சி 900 முதல் 950 வரை விற்பனை செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோரான மக்கள் தெரிவிக்கின்றனர்.
எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் கோழிகளுக்கு வழங்கப்படும் தீன் வகைகள் என்பனவற்றின் விலைகள் அதிகரிப்பே இறைச்சி கோழிகளுக்கு தட்டுப்பாடு காணப்படுவதாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
