
இலங்கை மக்கள் தொகையில் 16 வீதமானவர்களுக்கு உறக்கத்தின் போது அடிக்கடி மூச்சித்திணறல் ஏற்படும் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக புதிய ஆய்வு ஒன்று குறிப்பிடுகின்றது.
நித்திரையின் போது குறட்டை விடும் நபர்களிடம் இந்த நோய் நிலைமையை அதிகளவில் காண முடியும் என்பதுடன், குறிப்பாக பருமனான உடலமைப்பை கொண்டவர்களுக்கு பெருமளவில் இந்த நிலைமை ஏற்படுகிறது.
இப்படியான நபர்களுக்கு சுவாச கோளாறு ஏற்படுகிறது, சீரான சுவாசம் நடைபெறுவதில்லை. இதன் காரணமாக இவர்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர் என சிறி ஜயவர்தனபுர பல்கலைக்கழக மருத்துவப் பீடத்தின் சுவாச நோய்கள் தொடர்பான சிறப்பு நிபுணர் மருத்துவர் சந்திமானி உந்துகொடகே தெரிவித்துள்ளார்.
சர்வதேச உறக்க தினத்தை முன்னிட்டு இன்று கொழும்பில் நடத்திய ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பாக மேலும் தெரிவித்துள்ளதாவது,
இந்த நோய் நிலைமை காரணமாக உறக்கம் குறைந்து, உடலுக்கு தேவையான ஒக்சிஜன் கிடைப்பதில்லை. இதனால், சுவாசக் கோளாறு, பாலியல் குறைப்பாடுகள், நீரிழிவு போன்ற நோய்கள் ஏற்படலாம்.
உறங்கும் போது ஒரு மணி நேரத்திற்கு ஐந்து முறைக்கு அதிகமாக முச்சித்திணறல் ஏற்படுவதே இந்த நோயின் அறிகுறி. இதனை மருத்துவ விஞ்ஞானம் மூலம் கண்டறிய முடியும். இந்த நோய் உள்ளவர்கள் உறக்கத்தின் போது சத்தமாக குறட்டை விடுவார்கள்.
குறட்டை விடுபவர்கள் அனைவரும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல, இந்நோயை வயது வந்தவர்களிடம் அதிகளவில் காண முடியும். எனினும் தற்போது சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் நோயாளர்கள் கண்டறியப்படுகின்றனர்.
பிறப்பில் இருந்தே இந்த நோய் இருக்கும் குழந்தைகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுவாசம் சம்பந்தப்பட்ட மருத்துவரை அணுகி இந்த நோய்க்கான சிகிச்சையைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.