
சியோல், மார்ச் 19
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் 3-வது வாரத்தை கடந்துள்ளது. ரஷ்ய படைகள் தாக்குதலின் வேகத்தை அதிகரித்து வருவதால் போர் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருகிறது.
இந்த நிலையில் உக்ரைனில் நிலைமை மோசமாகி வருவதால் அந்நாட்டின் மேற்கு நகரமான லிவிவ் நகரில் உள்ள தங்கள் நாட்டு தூதரகத்தை மூட உள்ளதாக தென்கொரியா அறிவித்துள்ளது. இது குறித்து தென்கொரியா வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “லிவிவ் அருகே ராணுவ அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதால் தூதரகம் செயல்படுவது மற்றும் அதன் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது கடினம்.
எனவே தூதரகத்தை தற்காலிகமாக மூட முடிவு செய்யப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது. முன்னதாக உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கியதும் கடந்த 3-ந் திகதி தலைநகர் கீவில் இருந்த தங்கள் நாட்டு தூதரகத்தை லிவிவ் நகருக்கு தென்கொரியா மாற்றியது குறிப்பிடத்தக்கது.