
கொழும்பு, மார்ச் 19: 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரினால் லிட்ரோ நிறுவனம் தற்போது ரூ. 2,000 நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளது. இந்த நிலை நீடித்தால் மூன்று மாதங்களுக்குள் லிட்ரோ நிறுவனத்தை இழுத்து மூட வேண்டிய நிலை ஏற்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நிறுவனத்தின் விளம்பர முகாமையாளர் பியல் கொலம்பஹெட்டிகே கூறுகையில்
“12.5 கிலோ வீட்டு எரிவாயு சிலிண்டருக்கு நிகர இழப்பு 2,000 ரூபாய். அதிகரிக்கும் ஒவ்வொரு டொலருக்கும் எரிவாயு சிலிண்டரின் செலவு12.50 ரூபாய் அதிகரிக்கிறது. ஒப்பந்த அடிப்படையில் நாங்கள் மற்றொரு எரிவாயு கப்பலை வாங்கினால் அது லிட்ரோ நிறுவனத்தின் இறுதி பயணமாக அமையும். லிட்ரோ நிறுவனம் இந்த விலையின் கீழ் இயங்கினால் இன்னும் மூன்று மாதங்களில் இழுத்து மூட வேண்டிய நிலை ஏற்படும். எரிவாயு விலையை உடனடியாக அதிகரிக்க வேண்டும். தற்போது ஒரு எரிவாயு சிலிண்டர் ரூ.2,675 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், இதற்கு ஆகும் உண்மையான செலவு ரூ.4,462.25 ஆகும்.
தற்போது ஒரு கப்பலுக்கு சுமார் 18 இலட்சம் ரூபாய் தாமதக் கட்டணம் செலுத்தி வருகிறோம். இதை 200 மில்லியன் ரூபாய் நஷ்டத்தில் விற்று அடுத்த கப்பலை எப்படி வாங்குவது என்றார் அவர்.