
பண்டிகை காலம் மற்றும் போராட்டங்கள், பொதுக்கூட்டங்களில் அதிகளவில் மக்கள் ஒன்றுகூடும் சந்தர்ப்பங்களில் சுகாதார நடைமுறைகள் சரியாக பின்பற்றாவிடில் இலங்கையில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கையில்,
பண்டிகைக் காலம் நெருங்கி வரும் நிலையில், போராட்டங்கள் மற்றும் பொதுக் கூட்டங்களில் கலந்துகொள்வது குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தற்போது நாளாந்தம் பதிவாகும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ள போதிலும், மக்கள் பொதுக் கூட்டங்களை ஒழுங்கமைக்கும் போது சுகாதார நடைமுறைகளை மீறினால் எந்த நேரத்திலும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
மேலும், வரவிருக்கும் பண்டிகை காலத்தை மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் கொண்டாட காத்திருக்கின்றனர்.
இருப்பினும், மக்கள் அடிப்படை சுகாதார வழிகாட்டல்களை புறக்கணித்து செயற்பட்டால், பண்டிகை காலத்திற்குப் பிறகு கொரோனா நிலைமை ஆபத்தானதாக மாறும்.
அதற்கிணங்க, குறிப்பாக ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பிற பொதுக் கூட்டங்களை ஏற்பாடு செய்பவர்கள் மற்றும் அதில் பங்கேற்பவர்கள் கொவிட் தொற்று பரவும் வகையில் செயற்படாமல் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றுவதில் மிகவும் கவனமாக இருக்குமாறு அவர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.