கிரைஜ் பிரத்வெயிட் சதம்: மூன்றாம்நாள் ஆட்ட நேர முடிவில் மே.தீவுகள் அணி 288-4

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் மேற்கிந்திய தீவுகள் அணி, நேற்றைய மூன்றாம்நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 288 ஓட்டங்களை பெற்றது.

ஆட்டநேர முடிவில், கிரைஜ் பிரத்வெயிட் 109 ஓட்டங்களுடனும் அல்சார்ரி ஜோசப் 4 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.

இங்கிலாந்துக் கிரிக்கெட் அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களுடன் ஒப்பிடுகையில், மேற்கிந்திய தீவுகள் அணி 219 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது.

பார்படோஸ் மைதானத்தில் கடந்த 16ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 507 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட போது, தனது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, ஜோ ரூட் 153 ஓட்டங்களையும் பென் ஸ்டோக்ஸ் 120 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், பெருமாள் 3 விக்கெட்டுகளையும் கெமர் ரோச் 2 விக்கெட்டுகளையும் ஜெய்டன் சீல்ஸ், அல்சார்ரி ஜோசப், ஜேஸன் ஹோல்டர் மற்றும் பிரத்வெயிட் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, நேற்றைய மூன்றாம்நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 288 ஓட்டங்களை பெற்றது.

இன்னமும் 6 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தை மேற்கிந்திய தீவுகள் அணி, இன்று தொடரவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *