இலங்கை மக்களுக்கு அதிகரிக்கும் சுமை – இரட்டிப்பாகும் மின்சார கட்டணம்!

இலங்கையில் ஒரு யூனிட் மின்சாரத்திற்கு 13 ரூபாய் நஷ்டம் ஏற்படுவதனால் 14 பில்லியன் ரூபாவை மேலதிகமாக ஈட்டுவதற்காக மின்சார கட்டணத்தை அதிகரிக்க இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.

இறுதியாக 8 வருடங்களுக்கு முன்னரே இலங்கை மின்சார சபை மின்சார கட்டணத்தை அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய, தற்போது இலங்கை மின்சார சபையின் பணிப்பாளர் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை கிடைக்கப்பெற்றதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த யோசனை ஆய்வு செய்யப்பட்டு திருத்தங்களுடன் அங்கீகரிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுவரை 30 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு ஒரு யூனிட் மின்சாரம் 2.50 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வந்தது.

அதற்காக நிர்ணயிக்கப்பட்ட கட்டணமாக முப்பது ரூபாய் வசூலிக்கப்பட்டது. புதிய யோசனைக்கமைய, யுனிட் விலை ஐந்து சதமாக அதிகரிக்கப்படவுள்ளதுடன் நிலையான கட்டணம் 290 ரூபாவாக அதிகரிக்கவுள்ளது.

அதற்கமைய, ஏழு கட்டங்களின் கீழ் வீட்டு உபயோகத்தில் மின் நுகர்வுக்கான கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளன. அரசு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஹோட்டல்கள், கடைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கான கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளன.

தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணத்தில் குறைந்தபட்சம் 38 சதவீத அதிகரிப்பும், ஹோட்டல்களுக்கான மின் கட்டணத்தில் 23 சதவீத அதிகரிப்பும், அரசு நிறுவனங்களில் 22 சதவீத அதிகரிப்பும் இருக்கும் என்று யோசனைகளில் முன்வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *