
ஜனாதிபதி செயலகத்தை சுற்றிவளைத்து, ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவிருந்த மனுவை தீயிட்டுக்கொளுத்தி ஜே.வி.பியின் இளைஞர் அணி நேற்றுப் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், ஜனாதிபதி செயலகம் முன் கூட்டமொன்றையும் நடத்தியது.
ஜே.வி.பியின் இளைஞர் அணியான சோஷலிச இளைஞர் சங்கத்தின் ஏற்பாட்டில், ‘வேண்டாம் எண்ணெய் வரிசைகள்! இந்தியாவுக்கு தாரை வார்த்த எண்ணெய் குதங்களையும், அமெரிக்காவுக்கு தாரைவார்த்த யுகதனவியையும் மீளப்பெறு!!’ என வலியுறுத்தியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கொழும்பு டெக்னிகல் சந்தியில் ஆரம்பமான பேரணி, ஜனாதிபதி செலயகம்வரை சென்றடைந்தது.
இதன்போது ஜனாதிபதியிடம் மனுவொன்றைக் கையளிப்பதற்கு போராட்டக்காரர்கள் முற்பட்டனர். எனினும், அதற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஜனாதிபதி செயலாளராவது வரட்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். எனினும், அந்தக் கோரிக்கையும் ஏற்கப்படவில்லை.
இதனையடுத்து சிலர் பலவந்தமாக உள்நுழைவதற்கு முற்பட்டனர். அவர்களை பாதுகாப்பு தரப்பினர் தடுத்து நிறுத்தினர். இதனால் சிறிதுநேரம் பதற்றநிலை உருவானது. மகஜரை ஜனாதிபதி பொறுப்பேற்காததால், அதனை தீயிட்டுக் கொளுத்தி இளைஞர்கள் எதிர்ப்பை வெளியிட்டனர்.