
வலிகாமம் பிரதேச சபையின் நேற்றைய அமர்வின்போது, சண்டிலிப்பாய் பிரதேச வட்டார உறுப்பினர் இராஜேஸ்வரன் பிச்சைக்காரன் வேடமிட்டு யாசகமேந்திப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள், எரிவாயு நெருக்கடிகளுக்கு மத்தியில் இன்று இந்த வேலையைத்தான் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நாட்டில் மக்கள் படுகின்ற பேரவலத்தை என்னால் முடிந்தவரை வெளிப்படுத்தும் வகையில்தான் இவ்வாறான கோலத்தில் இன்றைய அமர்வுக்கு நான் வந்திருக்கின்றேன்.
இந்த நாட்டினுடைய அரசாங்கம் வேறு நாடுகளுக்குச் சென்று யாசகம் எடுக்கின்றது.
இந்த நாட்டில் வாழ்கின்ற மக்கள் வீதிவீதியாகச் சென்று யாசகம் எடுக்கின்றார்கள். அனைத்து மக்களும் கோவணத்தையும் மறந்தவர்களாக நடு வீதியில் அநாதைகளாக விடப்பட்டுள்ளனர். அபிவிருத்தி என்கின்ற மாயையை கைவிட்டு மக்கள் உண்பதற்கான அரிசியைப் பற்றிச் சிந்தியுங்கள் – என்றார்.