
முல்லைத்தீவு – புதுமாத்தளன் பகுதியில் இரண்டு சிறுமிகள் கடந்த 16ஆம் திகதி காணாமல் போன நிலையில், அவர்களை தேடும் நடவடிக்கையில் பெற்றோர்கள் கிராமத்தினர்கள் பொலிசார் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று மாலை புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் இருவரும மீட்கப்பட்டுள்ளனர்.
சிறுமிகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, ஒருவர் பேஸ்புக் ஊடாக மட்டக்களப்பு – செங்கலடிப்பகுதி இளைஞர் ஒருவருடன் காதல் தொடர்பினை ஏற்படுத்தியுள்ளார்.
அந்த இளைஞன் சிறுமியினை மட்டக்களப்பு வருமாறு அழைத்துள்ளதை தொடர்ந்து, சிறுமி மாலைநேர கல்விக்கு செல்வதாக வீட்டில் சொல்லிவிட்டு, தனது நண்பியுடன் சைக்கிளில் சென்றுள்ளார்.
பின்னர் சைக்கிளை பற்றைக்காட்டிற்குள் போட்டுவிட்டு பேருந்தில் ஏறி மட்டக்களப்பு செங்கலடிக்கு சென்றுள்ளார்கள்.
செங்கலடி இளைஞன் இருவரையும் காரில் ஏற்றிச்சென்று, தான் பேசிய சிறுமியுடன் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளதை தொடர்ந்து, அவர்களை யாழ்ப்பாணத்திற்கு செல்லும் பேருந்தில் ஏற்றிவிட்டுள்ளார்.
இரண்டு சிறுமிகளும் யாழ்ப்பாணம் சென்று, யாழ் நகரப்பகுதியில் சுற்றிதிரிந்த வேளையில், சிறுமிகளுக்கும் உதவிசெய்வதாக கூறி இரண்டு இளைஞர்கள் சிறுமிகளை அழைத்துச் சென்று வீடு ஒன்றில் தங்கவைத்து பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
யாழ்ப்பாணத்தில் இருந்து முல்லைத்தீவு பேருந்தில் இரண்டு சிறுமிகளும் ஏற்றி அனுப்பப்பட்டுள்ளதுடன், இரண்டு சிறுமிகளும் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் வந்திறங்கியுள்ளார்கள்.
புதுக்குடியிருப்பில் இருவரும் கைதுசெய்யப்பட்டு முல்லைத்தீவு பொலிசில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இருவரிடத்திலும் பெறப்பட்ட வாக்குமூலத்தினை தொடர்ந்து, இரண்டு சிறுமிகளும் மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
சிறுமிகள் இருவருடனும் பாலியல் துஸ்பிரயோகத்தினை மேற்கொண்டவர்கள் தொடர்பில் முல்லைத்தீவு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.