ஊழல், மோசடிகளுக்கு இடமளிக்க கணக்காய்வு ஆணைக்குழு நீக்கப்பட்டது? – மைத்திரி கேள்வி

ஊழல், மோசடிகளுக்கு இடமளிப்பதற்காகவா, 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட கணக்காய்வு ஆணைக்குழு 20 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் நீக்கப்பட்டது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேள்வி எழுப்பியுள்ளார்.

வெயங்கொடை நைவல பிரதேசத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கம்பஹா மாவட்ட மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த கேள்வி எழுப்பியுள்ளார்.

எவ்வளவு தவறாக வேலைகளை செய்திருந்தாலும் எந்த அரசியல்வாதியும் இதுவரை சிறையில் அடைக்கப்படவில்லை. இறுதியில் அவர்கள் விடுதலையாகி விடுவார்கள்.

இந் நிலைமையில், கணக்காய்வு ஆணைக்குழு இருப்பது மிகவும் முக்கியமானது. ஊழல், மோசடிகளுக்கு இடமளிக்கவா தற்போதைய அரசாங்கம் இந்த ஆணைக்குழுவை இரத்துச் செய்தது என்ற கேள்வி கல்வியாளர்கள், நிபுணர்கள் மாத்திரமல்லாது மக்களுக்கும் இருக்கின்றது.

19 ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்கள் மிகவும் முக்கியமானவை என்பதுடன் அவை முக்கியமான பணிகளை நிறைவேற்றின.

அதேவேளை தற்போது நாட்டில் காணப்படும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமாயின் சர்வதேச தொடர்புகளை வலுப்படுத்த வேண்டியது அவசியம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *