
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று எரிவாயு விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் சில இடங்களில் பொதுமக்களுக்கும் விநியோகஸ்தர்களுக்குமிடையே முறுகல் நிலைகள் ஏற்பட்டதை காணமுடிந்தது.
கடந்த சில வாரங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதன் காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதுடன் பெரும்பாலான உணவகங்களும் மூடிய நிலையில் காணப்படுகின்றன.
இந்த நிலையில் இன்றைய தினம் மட்டக்களப்பு நகர் உட்பட சில பகுதிகளில் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு பயினியர் வீதியில் எரிவாயு சிலின்டர்கள் விநியோகம் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் ஒரு கிலோமீற்றருக்கும் நீளமான தூரத்தில் வரிசையாக நின்று எரிவாயு சிலின்டர்களை கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது சுமார் 125பேருக்கு மட்டுமே சிலின்டர்கள் விநியோகம் செய்யப்பட்ட காரணத்தினால் ஏனையவர்கள் விநியோகஸ்தர்களுடன் முரண்பட்டதை காணமுடிந்தது.
எரிவாயு சிலிண்டர்கள் இல்லாமல் உணவகங்கள்,வெதுப்பகங்களை மூடவேண்டிய நிலையுள்ளதாகவும் இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்குவதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.