
கந்தரோடையில் விகாரைக்கு அடிக்கல் நடுகை செய்ய பிரதமர் மஹிந்த ராஜபக்ச செல்லவிருப்பதாக வெளியான தகவலையடுத்து அந்தப் பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து விகாரைக்கு அடிக்கல் நடுகை செய்யச் செல்லும் திட்டத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ச கைவிட்டுள்ளார்.
கந்தரோடையில் கதுறுகொட புராதன விகாரை என்று இராணுவத்தினரால் அடையாளப்படுத்தப்பட்ட இடம் உள்ளது. அதற்கு அருகில் புதிய விகாரை அமைப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தனது யாழ்ப்பாணப் பயணத்தின்போது அங்கு செல்வார் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதனையடுத்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர், யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக நேற்றுக் காலை கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மதியமளவில் கந்தோரையில் விகாரை அமைக்கப்படவுள்ளதாகக் கூறப்படும் இடத்துக்கு முன்பாகவும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
’விகாரைக்கு அடிக்கல் நடாதே’, ’தமிழினத் துரோகிகளே வெளியேறு’, ’அங்கஜன், டக்ளஸின் அடிவருடிகளே வெளியேறு’, ’வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்’, ’எப்பா எப்பா (வேண்டாம்) ஏக்கிய ராஜ்ஜிய (ஒற்றையாட்சி) எப்பா’, ’இராணுவமே வீடு செல்’, ’எமது நிலம் எமக்கு வேண்டும்’ என்று பல்வேறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது அங்கு பாதுகாப்புக் கடமையிலிருந்த பொலிஸாருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கும் இடையில் வாக்குவாதமும் ஏற்பட்டிருந்தது.
போராட்டக்காரர்கள் அங்கிருந்து அகலாத நிலையில், பிரதமரின் பயணம் கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து அங்கு பாதுகாப்புக் கடமையிலிருந்து பிரதமர் பாதுகாப்புப் பிரிவினர், இராணுவத்தினர், பொலிஸார் அங்கிருந்து அகன்று சென்றனர்.