
கொழும்பு, மார்ச் 20: பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டமையை அடுத்து ஒரு கோப்பை பால் தேநீரின் விலையை 100 ரூபா வரை அதிகரிப்பதற்கு உணவக உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக அந்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் கூறுகையில் “பால்மா விலை அதிகரிக்கப்பட்டு சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. இதன்காரணமாகவே விலையை அதிகரிக்க நேரிட்டுள்ளது.
விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் ஒரு தேநீருக்கு 3 கரண்டி பால்மா வரை பயன்படுத்துமாறு உணவக உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.
400 கிராம் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை தற்போது 250 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் 540 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட 400 கிராம் பால்மாவின் புதிய விலை 790 ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதவிர இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை 600 ரூபாவால் அதிகரிப்பதற்கு இறக்குமதியாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதற்கமைய தற்போது இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மா 1,945 ரூபா என விலையிடப்பட்டுள்ளது.