ஜனாதிபதி ஒருவர் மக்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் உட்படும் முதல் சந்தர்ப்பம் இதுவே! – எதிர்க்கட்சி

நாட்டில் தற்போது எந்தப் பொருட்களுக்கும் கட்டுப்பாட்டு விலை என்ற ஒன்று இல்லை. கட்டுப்பாட்டு விலை என்பது கொள்கை அளவில் மட்டுமே இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அரசாங்கமானது வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டு மருந்துப்பொருட்களின் விலையை நூற்றுக்கு 29 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. கட்டுப்பாட்டு விலையை நூற்றுக்கு 29 சதவீதமாக அதிகரித்துள்ளது.

உண்மையை கூறினால் இந்த நாட்டில் கட்டுப்பாட்டு விலை என்பது கொள்கையளவில் மட்டுமே உள்ளது.

மருந்தகங்களுக்கு சென்றால் அங்கு மருந்துகளுக்கென கட்டுப்பாட்டு விலை இல்லை. ஒவ்வொரு மருந்தகங்களும் தங்களுக்கு ஏற்றாற்போல மருந்துகளை விற்பனை செய்கின்றன. இது தொடர்பில் மேற்பார்வை செய்வதற்கு ஒருவரும் இல்லை.

நல்லாட்சி அரசாங்கத்தில், விலை கட்டுப்பாட்டை நிர்ணயித்ததன் பின்னர் உணவு மற்றும் ஒளடதங்களுக்கான பரிசோதகர்களை அழைத்து நாடளாவிய ரீதியில் சோதனைகளை மேற்கொண்டோம்.

முறைப்பாடுகளை செய்வதற்காக தொலைபேசி இலக்கத்தை வழங்கினோம். முறைப்பாடு கிடைக்கும்போது குறித்த இடத்துக்கு சென்று மருந்தகங்கள், ஒசுசலக்களில் அதிகாரிகள் சோதனைகளை மேற்கொண்டனர்.

எமது ஆட்சியில் கட்டுப்பாட்டு விலை முறையாக பேணப்பட்டது. ஒவ்வொரு மருந்தகங்களுக்கும் விலை கட்டுப்பாடு தொடர்பிலான தகவலை பெற்றுக்கொடுத்தோம். அதனை மருந்தகங்களில் காட்சிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டது.

ஆனால் அவ்வாறான செயற்பாடுகள் எதுவும் தற்போதைய அரசாங்கத்தில் இல்லை. கட்டுப்பாட்டு விலை என்பது கொள்கை அளவில் மட்டுமே உள்ளது.

நாளுக்கு நாள் பொருட்களின் விலை அதிகரித்து செல்கின்றது. வியாபாரிகளுக்கு ஏற்றவாறு பொருட்களின் விலையை அதிகரிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக மக்கள் இனி இல்லை என்றளவு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

நாட்டு மக்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஜனாதிபதி முகம்கொடுத்துள்ளார். நாட்டின் ஜனாதிபதி ஒருவர் மக்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் உட்படும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *