
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு தற்காலிக மனிதாபிமான அடிப்படையிலேயே ஒரு இலட்சம் ரூபாய் வழங்குவதற்கு தீர்மானித்து அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளது. இதனை உயிர்களின் விலையாகக் கொள்ள வேண்டியதில்லை. உறவுகளின் உணர்வுகளை கொச்சைப்படுத்தும் நோக்கம் எமக்கு இல்லை என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
கடந்த அமைச்சரவை கூட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு ஒரு இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அரசாங்கத்தின் இந்த முடிவுக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எதிர்ப்பை வெளியிட்டனர். அத்துடன், தமக்கு நீதியே வேண்டும் என்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையிலேயே மேற்கண்டவாறு நீதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. அதுவொரு சுயாதீனமான கட்டமைப்பாகும். அந்த அலுவலகத்தின் ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அடுத்த கட்டச் செயல்பாடுகள் குறித்து கரிசனை கொள்ளப்பட்டுள்ளது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் சான்றாதாரங்கள் காணப்படுமாயின் அதனை குறித்த அலுவலகத்திடத்தில் வெளிப்படுத்தி அதன் ஊடாக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். குறிப்பாக சட்டமா அதிபர் ஊடாக விசாரணைகளை முன்னெடுப்பதற்கு சட்ட ஏற்பாடுகள் உள்ளன.
நீதி அமைச்சு என்ற வகையில் சுயாதீனக் கட்டமைப்பான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான அலுவலகத்திற்கான நிர்வாகம் உள்ளிட்ட விடயங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் உள்ளிட்ட வசதிகளை வழங்கி வருகின்றோம்.
இதேநேரம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப அங்கத்தவர்கள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தியுள்ளோம். அந்த வகையில் அவர்களுக்கு தொழில் பயிற்சி, சுயதொழில் ஆரம்பம் உள்ளிட்ட பயிற்சிகளை வழங்கி தொழில் புரிவோராக உருவெடுப்பதற்கு உதவிகளை வழங்குகின்றோம்.
தற்போதைய நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் நிலைமைகளைக் கருத்தில்கொண்டு மனிதாபிமான நடவடிக்கையாக அவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் வழங்குவதற்கு தீர்மானக்கப்பட்டுள்ளது.
எனினும், இது அவர்களுக்கான தற்காலிக நிவாரணமே. மாறாக அவர்களின் போராட்டத்தை மலினப்படுத்தும் செயல்பாடல்ல. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் மனிதர்கள் என்ற அடிப்படையில் அவர்களின் சொந்தங்கள் படுகின்ற வேதனைகளை நான் நன்கு அறிவேன்.
அவர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தவில்லை. அதேநேரம், அவர்களை இந்தப் பணத்தை பெற்றுக்கொள்ளுமாறும் அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை. – என்றார்.