சந்தையில் பால்மாவுக்கு தட்டுப்பாடு

கொழும்பு, மார்ச் 21: பால்மா விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் சந்தையில் பால்மாவுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால்மா பொதியொன்றின் விலை 250 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இதுவரை ரூ.540 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட 400 கிராம் பால்மாவின் புதிய விலை ரூ.790 ஆக அதிகரித்துள்ளது.

இதுதவிர இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை 600 ரூபாவால் அதிகரிப்பதற்கு இறக்குமதியாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதற்கமைய தற்போது இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மா 1,945 ரூபா என விலையிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டமையை அடுத்து பால் தேநீரின் விலையை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பதற்கு உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய ஒரு கோப்பை பால் தேநீரின் விலையை 100 ரூபா வரை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.

பால்மா விலை அதிகரிக்கப்பட்டு சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாகவே விலையை அதிகரிக்க நேரிட்டுள்ளது.

விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் ஒரு தேநீருக்கு மூன்று கரண்டி பால்மா வரை பயன்படுத்துமாறு உணவக உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் பால் தேநீர் விருந்தகங்களில் உரிய தரத்தில் தயாரிக்கப்படவில்லை என நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர். மேலும், பல உணவகங்களில் பால் தேநீர் கிடைக்கவில்லை என நுகர்வோர் கூறினர்.

மேலும், நாட்டில் பல பாகங்களில் பால்மாவுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *