
கொழும்பு, மார்ச் 21
கொட்டாஞ்சேனை – ப்ளுமெண்டல் தொடர்மாடிக் குடியிருப்பு தொகுதியின் வீடொன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் பெண் ஒருவர் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்துள்ளனர்.
அவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொட்டாஞ்சேனை – ப்ளுமெண்டல் தொடர்மாடிக் குடியிருப்பு தொகுதியில் உள்ள 3ஆம் தளத்தில் உள்ள வீடொன்றில், நேற்று மாலை தீப்பரவல் ஏற்பட்டது.
அதனை கட்டுப்படுத்த கொழும்பு மாநகர சபையின் 5 தீயணைப்பு வாகனங்கள், ஈடுபடுத்தப்பட்டிருந்தன. குறித்த வீட்டில் இருந்த பெண் சமயலறையில் அடுப்பை பற்ற வைத்த போது, அவரது மகன் மோட்டார் சைக்களுக்காக கொள்வனவு செய்திருந்த பெற்றோல் கலனை எடுத்துள்ளார்.
இதன்போது, குறித்த கலன் தவறி, அதிலிருந்த பெற்றோல் சிதறிய நிலையில், இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து தம்மை காப்பாற்றும் நோக்கில், குறித்த பெண் தொடர் மாடிக்குடியிருப்பின் 3ஆம் தளத்திலிருந்து கீழே பாய்ந்த நிலையில், காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருடன் மேலும் 2 பேர் காயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.