
மட்டக்களப்பு, மார்ச் 21
நாம் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு ஜனாதிபதியின் சாதகமான சமிக்ஞை கிடைக்கும்வரை பேச் சில் நாம் பங்கேற்கப் போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) அறிவித்துள்ளது.
இந்த முடிவை, தலைவர்கள் சிறிசபாரெத்தினம், பிரபாகரன் ஆகியோரின் சிந்தனை இந்த நேரத்தில் எப்படி இருக்கும் என்று சிந்தித்து இந்த முடிவை மட்டக்களப்பில் கூடிய தலைமைக்குழு எடுத்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்தக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பி லேயே இதனைத் தெரிவித்தார். மேலும், எமது கட்சியின் தலைமைக் குழு மட்டக் களப்பில் கூடி சில தீர்மானங்களை எடுத் திருந்தது. குறிப்பாக ஜனாதிபதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழைத்தமையை ஒட்டி ஏற்கனவே நாங்கள் சம்பந்தன் ஐயாவுக்கு ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தோம். அது தொடர்பில் சில தீர்மானங்களை எடுத்திருந்தோம்.
எமது தீர்மானத்தின் போது நாங்கள் இரண்டு தலைவர்கள் பற்றிச் சிந்தித்தோம். ஒன்று எங்கள் கட்சியின் தலை வர் சிறிசபாரெத்தினம் மற்றையவர் விடு தலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் ஆகியோரின் சிந்தனை இந்த நேரத்தில் எவ்வாறு இருந்திருக்கும் என்று நாங்கள் சிந்தித்துப் பார்த்தோம். அந்த அடிப்படையிலே அவர்கள் இருந்திருந் தால் நிச்சயமாக இந்தப் பேச்சுக்க்கு நிபந்தனை விதித்திருப்பார்கள்.
அந்த நிபந்தனை என்பது நல்லிணக்க அடிப்படையிலே சில விடயங்களை ஜனாதிபதி செய்ய வேண்டும் என்று நாங்கள் சுட்டிக் காட்டியிருக்கின்றோம். ஜனாதிபதி இன்றுவரைக்கும் போரை நடத்தி முடித்தவர் என்ற பெருமிதத் தோடும் இறுமாப்போடும் சிங்கள மக்களின் வாக்குகளால் வந்தவர் என்கின்ற இனத்துவேசத்தோடும், இனப்பிரச்னை இந்த நாட்டிலே இல்லை பெருளாதாரப் பிரச்னை மாத்திரம்தான் இருக்கின்றது என்று சொல்லிக் கொண்டு இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பேச்சுக்கு அழைக்கின்றார்.
இப்படியான ஒரு சந்தர்ப்பத்திலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுக்கு அழைக்கப்பட்டிருக்கின்றது. இறுதியாகப் பங்கேற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டத்தில், அங்கத்துவக் கட்சிகளாக இருக்கின்ற தமிழ் அரசுக் கட்சியும் புளொட் கட்சியும் பேச்சுக்கு செல்வதாகத் தெரிவித்தார்கள். நாங்கள் எங்களின் தலைமைக்குழுவில் தீர்மானித்தே எங்கள் முடிவை அறிவிப்பதாகத் தெரிவித்திருந்தோம்.
எங்களின் தீர்மானத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் ஆதரிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்திருந்தோம். எங்கள் பங்காளிக் கட்சிகள் ஜனாதிபதியுடன் பேச்சுக்குச் செல்வதை சற்று நிதானமதாகச் சிந்திக்க வேண்டும்.
நேற்றைய தினம் கூடயாழ்ப்பாணத்தில் புத்தர் சிலை நிறுவுகின்ற செயல்பாடு நடைபெற்றது. இவ்வாறாக இந்த அரசு இக்கட்டான நிலைமையில் இருக்கின்ற சந்தர்ப்பத்திலே நாங்கள் இந்த அரசைக் காப்பாற்றுகின்ற செயல்பாட்டில் ஈடுபடக்கூடாது. எனவே நாங்கள் எமது தலைமைத்துவக் குழு தீர்மானித்ததன் பிரகாரம் நல்லெண்ண சமிக்ஞையை ஜனாதிபதி வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறு நல்லெண்ண சமிக்ஞைகளை அவர் வெளிப்படுத்தாதவரை நாம் பேச்சு செல்லமாட்டோம் என்றார்.