
உக்ரைன், மார்ச் 21
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி மாதம் 24-ந் திகதி ராணுவத் தாக்குதலை தொடங்கியது. தொடர்ந்து 4 வாரங்களுக்கும் மேலாக அங்கு ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷ்ய படைகள் தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் ஆகிய நகரங்களில் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன.
இதனால், உக்ரைன் – ரஷ்ய படைகள் இடையே தீவிர சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தபோதும் அவை தோல்வியிலேயே முடிகின்றன. இந்த நிலையில் உக்ரைனிலிருந்து இதுவரை 1 கோடிக்கும் அதிகமான மக்கள், தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்து இருப்பதாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலை அசோவ் கடலில் இருந்து ரஷியப் படைகள் துண்டித்துவிட்ட நிலையில், மரியுபோல் நகரில் உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய உருக்கு ஆலையான அசோவ் இரும்பு உருக்கு ஆலை மீது ரஷ்யப் படைகள் தாக்கியுள்ளது.
ரஷ்யப் படைகளின் தாக்குதலில் உருக்கு ஆலை பெருமளவில் சேதமடைந்துள்ளதாக உக்ரைன் உள்துறை அமைச்சரின் ஆலோசகர் தகவல் தெரிவித்துள்ளார். ரஷ்யப் படைகளின் தாக்குதலில் இரும்பு உருக்கு ஆலை பெரும் சேதமடைந்துள்ளதால் மூடப்பட்டுள்ளதாகவும், இதனால் பொருளாதார பேரிழப்பும், சுற்றுச்சூழல் அழிவும் ஏற்பட்டுள்ளதாக உக்ரைனியே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.