கல்விப்புரட்சி மூலம் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்தமுடியும் – திருமுருகன் தெரிவிப்பு

கல்விப் புரட்சி மூலம் நுவரெலியா மாவட்டத்தில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். எனவே, இம்மாவட்டத்தில் வாழும் மாணவர்கள் கல்வித்துறையில் வெற்றிநடைபோட என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் அள்ளி வழங்குவேன். என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நுவரெலியா மாவட்ட பிரதம அமைப்பாளர் திருமுருகன் தெரிவித்தார்.

‘விஷ்ணு ஆரோவணம்’ எனும் அரச சார்பற்ற நிறுவனத்தை நடத்தி வரும் திருமுருகன், நுவரெலியா மாவட்டம் உட்பட மலையகத்தில் வாழும் மாணவர்களுக்கும், மக்களுக்கும் பல வழிகளிலும் நேசக்கரம் நீட்டிவருகின்றார். மாணவர்கள் பல்கலைக்கழகம்சென்று பட்டம் பெறுவதற்கான புலமைப்பரிசில் திட்டம், சத்துணவுத் திட்டம் என்பனவும் இவற்றில் உள்ளடங்கும்.

இந்நிலையில் கொட்டகலை மேபீல்ட் தோட்டம், சாமஸ் பிரிவு, வட்டவளை மவுன்ஜீன் தோட்டம், கடவளை தோட்டம் ஆகிய பகுதிகளில் தெரிவு செய்யப்பட்ட பிள்ளைகளுக்கு சத்துணவு வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய திருமுகன் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

விஷ்ணு ஆரோவணம் எனும் அரச சார்பற்ற நிறுவனம் என்னால் 2017 இல் தொடங்கப்பட்டது. அன்று முதல் சமூகசேவையும் ஆரம்பமானது. குறிப்பாக பல்கலைக்கழகம் தெரிவாகி, வறுமையால் கல்வியை தொடர முடியாமல் இருந்த சுமார் 120 மாணவர்களுக்கு மாதம் 6 ஆயிரம் ரூபா புலமைப்பரிசல் வழங்க நடவடிக்கை எடுத்தேன். இனியும் அந்த சேவை தொடரும். கல்வி கண் திறப்பதற்கு என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் வழங்கிவருகின்றேன்.

எனது சேவையை பாராட்டி, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நுவரெலியா மாவட்ட பிரதம அமைப்பாளர் பதவியை கட்சித் தலைவர் மைத்திரிபால சிறிசேன எனக்கு வழங்கியுள்ளார். இந்த பொறுப்பையும் நான் மக்களுக்காகவே பயன்படுத்துவேன்.

நுவரெலியா மாவட்டத்தில் வாழும் சிறார்களுக்கான சத்துணவு திட்டத்தையும் ஆரம்பித்துள்ளேன். சிறார்களின் மூளை வளர்ச்சிக்கு புரதம் உள்ளிட்ட சத்துணவுகள் அவசியம். அவை இப்பகுதிகளில் உரிய வகையில் வழங்கப்படுவதில்லை. இந்நிலைமையை மாற்றியமைக்கவே மேற்படி திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *