தொலைபேசி விற்பனை நிலையம் உடைத்து கொள்ளை! – ஏழு பேர் கைது

காத்தான்குடி பிரதேசத்தில் கையடக்க தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றினை உடைத்து கையடக்க தொலைபேசிகளை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் பிரதான வீதியில் உள்ள கையடக்க தொலைபேசி விற்பனை நிலையம் கடந்த முதலாம் திகதி இரவு கதவு உடைத்து அங்கிருந்த 24 இலட்சம் ரூபா பெறுமதியான 75 கையடக்க தொலைபேசிகள் கொள்ளையிடப்பட்டன.

இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சப் இன்பொக்டர் வை.விஜயராஜா தலைமையிலான குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் வெளிவந்த தகவலினடிப்படையில் அம்பாறை – இறக்காமம் பிரதேசத்தில் பெண் ஒருவர் உட்பட 3 பேரும், அக்கரைப்பற்றில் ஒருவருமாக 4 பேரை கடந்த 13ஆம் திகதி 23 கையடக்க தொலைபேசிகளுடன் கைது செய்து நீதிமன்றில் முன்னிறுத்திய போது அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது. அதன் அடிப்படையில் அவர்கள் நால்வரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்த கொள்ளையின் பிரதான சூத்திரதாரி தலைமறைவாகிய நிலையில் 19ஆம் திகதி 21 வயதுடைய இறக்காமம் பிரதேசத்தைச் சேர்ந்த பிரதான சூத்திராரியுடன் போரதீவை சேர்ந்த ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டு 13 கையடக்க தொலைபேசிகள் மீட்கப்பட்டதுடன் இவர்களும் நீதிமன்றில் முன்னிறுத்தி விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்த கொள்ளையர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் வழங்கிய தகவலுக்கமைய மட்டக்களப்பு – சல்லிப்பிட்டி பகுதியில் இந்த கொள்ளை குழுவைச் சேர்ந்த ஒருவரை நேற்று ஒரு கையடக்க தொலைபேசியுடன் கைது செய்தனர்.

இந்த கொள்ளையுடன் தொடர்புடைய ஒரு பெண் உட்பட 7 பேரை இதுவரை கைது செய்துள்ளதுடன், 43 கையடக்க தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *